புதுக்கோட்டையில் அமைதியான இடைத் தேர்தல்-73.5% வாக்குகள் பதிவு

புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமானும் தேமுதிக சார்பில் ஜாகீர் உசைனும் பிரதான வேட்பாளர்கள். திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. தேமுதிக வேட்பாளரை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இத்தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சாவடிகளிலும் காலையில் அமைதியாக வாக்குப் பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளில் கூட்டம் அலைமோதியது.
8 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 12 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தது. அதன் பின்னர் 34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வெயிலின் தாக்கம் சற்று குறைய குறைய வாக்காளர்களின் வருகையு அதிகரித்தது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி மொத்தம் 51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு அமைதியாக முடிவடைந்தது. மாலையில் வாக்காளர்களின் வருகை அதிகரித்ததால் மொத்தம் 73.56 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 15-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications