ஹைதராபாத் கண்காட்சியில் பயங்கர தீ: 75 கடைகள் நாசம்-சேத மதிப்பு ரூ.5 கோடி
ஹைதராபாத்: குக்கட்பள்ளி கண்காட்சி மைதானத்தில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 75 கடைகள், 4 லாரிகள் நாசமாகின. சேத மதிப்பு ரூ. 5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஹைதராபாத்-மும்பை நெடுஞ்சாலையில் உள்ள குக்கட்பள்ளி கண்காட்சி மைதானத்தில் கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு மைதானத்தில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 75 கடைகள் எரிந்து நாசமாகின. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 லாரிகளும் நாசமாகின. இது குறித்து உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தன. சேத மதிப்பு ரூ. 5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. காலையில் கண்காட்சி துவங்கப்படாததால் மைதானத்தில் மக்கள் கூட்டம் இல்லை. அதனால் உயிர் இழப்பு இல்லை. இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. மைதானத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தால் ஹைதராபாத்-மும்பை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.