காந்தி பேரனுக்கு ஜனாதிபதி பதவி தர காங்கிரஸுக்கு விருப்பமில்லை!

இந்த நிமிடம் வரை பிரணாப் முகர்ஜியின் பெயரே காங்கிரஸ் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு சில பெயர்களையும் காங்கிரஸ் பரிசீலிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
அவர்களில் முக்கியமானவர் கரண் சிங். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். இவர் மீது தற்போது காங்கிரஸ் பார்வை தீவிரமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சிங்குக்கு இடதுசாரிகளும்,தேசியவாத காங்கிரஸும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் மோஷினா கித்வாய் பெயரும் வேட்பாளர் பெயர் பரிசீலனையில் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பெயரையும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் சேர்த்துள்ளதாம். அன்சாரியை பேசாமல் குடியரசுத் தலைவராக்கி விடலாமே என்ற எண்ணத்தில் காங்கிரஸ் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அன்சாரியை முலாயம் சிங் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே,மமதா பானர்ஜியும் தன் பங்குக்கு ஒருவரை வேட்பாளராக பரிந்துரைத்துள்ளாராம்.அவர் கோபாலகிருஷ்ண காந்தி. இவர் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஆவார். ஆனால் காந்திக்கு காங்கிரஸ்,இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்காது என்கிறார்கள். இந்த காந்தி வேறு யாருமல்ல, மகாத்மா காந்தியின் பேரன்தான். ஆனால் அவருக்கே காங்கிரஸ் ஆதரவு கிடைக்கவி்ல்லையாம்...
இந்தப் பட்டியல் போதாது என்று முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பெயரையும் மமதா பரிந்துரைத்துள்ளாராம். இப்படி ஏகப்பட்ட புதுப் பெயர்கள் காங்கிரஸ் முன் குவிந்து கிடக்கிறது. சோனியாவும்,மமதாவும் இன்று சந்திக்கும்போது ஏதாவது ஒரு பெயர் இறுதி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications