கவர்ச்சிகரமான திருமண விளம்பரம் கொடுத்து 22 பெண்களிடம் ரூ.12 லட்சம் லவட்டிய நபர்
ஹைதராபாத்: பிரபல திருமண இணையதளத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுத்து 22 பெண்களிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ரவி கிஷோர் போஜங்கி. பி.டெக். பட்டதாரி. அவர் பிரபல திருமண இணையதளம் ஒன்றில் தனக்கு பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்தார். பி.டெக். படித்த அவர் தான் மும்பை ஐஐடியில் படித்ததாகவும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயரிய பதவியில் இருப்பதாகவும் அந்த இணையதளத்தில் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த பல பெண்கள் நல்ல மாப்பிள்ளையாக இருக்கிறாரே என்று நினைத்து அவரை ஆன்லைனில் தொடர்பு கொண்டனர். இது போன்று சுமார் 54 பெண்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். ரவி கிஷோரும் அவர்களுடன் ஆன்லைனில் பேசி வந்துள்ளார். 54 பேரில் 22 பேரிடம் தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை, தாய்க்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்று ப்லவேறு பொய்களைக் கூறி அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.
அவர் வேலைக்கே போகாமல் இதுபோன்று பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பணம் கொடுத்தவர்களில் ஒரு பெண் சுதாரித்துக் கொண்டு இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கடந்த 11ம் தேதி ரவி கிஷோரை கைது செய்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது 54 பெண்களுடன் ஆன்லைனில் தொடர்பு வைத்துள்ளதாகவும், அதில் 22 பேரிடம் இருந்து ரூ.12 லட்சம் பணம் பெற்றதாகவும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications