திராவிடக் கட்சிகளால் தமிழகம் கெட்டு குட்டிச்சுவராப் போச்சு: ராமதாஸ்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும். அதில் குறைந்தது 10 தொகுதிகளையாவது கைப்பற்றும். கடந்த 45 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளால் தமிழ் மொழி வளரவில்லை மாறாக அழிந்துவிட்டது. ஆங்கிலம் கலந்து கலப்பு மொழியாக தமிழ் மொழி மாறும் நிலை உருவாகும். தமிழ் பண்பாட்டையே கெடுத்துவிட்டனர்.
திராவிடக் கட்சிகள் நதிநீர் உரிமையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் இன்று நாம் உரிமைகளை எல்லாம் இழந்துவிட்டோம். 45 ஆண்டுகளாக தமிழகத்தில் சினிமா அரசியல், திராவிடக் கட்சிகள் ஆட்சியால் மது மயக்கம் மற்றும் சினிமா மோகத்தால் இளைஞர்கள் கெட்டுவிட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், இலவசங்களை அள்ளிக் கொடுத்தும் திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வருகின்றன.
திராவிடக் கட்சிகளால் கட்டணமில்லாமல் தரமான கல்வி கிடைப்பதில்லை, மேலும் அக்கட்சிகள் தனியார் பள்ளின் கல்விக் கொள்ளைக்கு துணையாக நின்று அதை வணிகமாக்கிவிட்டனர். மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மாணவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர் வரை கெடுத்துவிட்டனர்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்று ஆட்சியை உருவாக்கும் எண்ணத்தில் பாமக மக்களை அணுகி புதிய அரசியல் தத்துவங்கள், கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளை விதைத்து வருகிறது. வரும் 2016ம் ஆண்டு தமிழக மக்கள் பாமகவை ஆட்சியில் அமரவைப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை அமல்படுத்தும் கோப்பில் தான் முதன்முதலாக கையெழுத்திடுவோம்.
தமிழகத்தில் மதுவை ஒழிக்க நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்நிலையில் வரும் ஜூலை 11ம் தேதி தமிழகத்தில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தவிருக்கிறோம் என்றார்.