வாஷிங்டன் நீதிபதியாக இந்தியரை பரிந்துரைத்த ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியர்-அமெரிக்கரான ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசனை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்காவில் 13 கோர்ட் ஆப் அப்பீல்ஸ் என்னும் நீதிமன்றங்கள் உள்ளன. அவற்றில் 179 நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் நாட்டின் இரண்டாவது பெரிய நீதிமன்றம் என்று கூறப்படும் வாஷிங்டனில் உள்ள அப்பீல்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதியாக சண்டிகரில் பிறந்த இந்தியர்-அமெரிக்கரான ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசனை(45) அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். அவரது பரிந்துரையை அமெரிக்க செனட் ஏற்றுக் கொண்டால் அவரது வாழ்நாள் முழுவதும் நீதிபதியாக நீடிக்கலாம்.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீனிவாசன் அமெரிக்காவின் துணை சாலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன் அந்த பதவியில் இன்னொரு இந்தியர்-அமெரிக்கரான நீல் குமார் கட்யால் இருந்தார்.
ஸ்ரீனிவாசனுடன் கெய்ட்லின் ஹல்லிகன் என்பவரை அதே நீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஒபாமா பரிந்துரைத்துள்ளார். கெய்ட்லின் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பொறுப்பான ஊழியர்கள். அவர்கள் இந்த பதவிக்கு வந்தால் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீனிவாசன் சண்டிகரில் பிறந்து கன்சாஸில் உள்ள லாரன்ஸில் வளர்ந்தவர். 1989ம் ஆண்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார். 1995ம் ஆண்டு ஸ்டான்போர்டு சட்ட பள்ளியில் மேற்படிப்பு முடித்தார். அதே ஆண்டு அவர் ஸ்டான்போர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆப் பிசினசில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.
1995ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அவர் கொலம்பியா சர்க்கியூட்டில் உள்ள கோர்ட் ஆப் அப்பீல்ஸின் நீதிபதி ஹார்வி வில்கின்சனிடம் சட்ட கிளார்க்காக பணியாற்றினார். 2007ம் ஆண்டு ஓ'மெல்வெனி மற்றும் மயர்ஸ் எல்எல்பியின் பார்ட்னரானார். 2011ம் ஆண்டு அந்த சட்ட நிறுவனத்தின் தலைவர் ஆனார். 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை சாலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
தற்போது நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.