சமாதானமாகிறார் முலாயம்சிங் யாதவ்- சோனியா காந்தியை சந்தித்து பேச முடிவு?
பிரணாப் மீது கடுப்பு ஏன்?
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை களமிறக்குவது என்று காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆனால் தங்களது மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்காதது, தாம் வெளிப்படையாக ஆதரிப்பதாக முதலில் கூறியபோதும் தம்மிடம் ஆதரவு கோராதது போன்ற காரணங்களால் பிரணாப் மீது செம கடுப்பில் இருந்தார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி. இதேபோல் உத்தரப்பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் பொறுப்பேற்ற பிறகு சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி 13 கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறார். ஆனால் பதிலேதும் கிடைக்கவில்லை. இதில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங்குக்கு செம கடுப்பு. இதனால் இருவரும் இணைந்தே பிரணாப் முகர்ஜியை எதிர்த்தாக வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கிங்மேக்கர் ஆசை?
இந்நிலையில் மேற்குவங்கத்தில் இடதுசாரிகளை வீழ்த்திய மமதா பானர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் தேசிய அரசியலில் இதுவரை இடதுசாரிகள் வகித்து வந்த கிங்மேக்கர் பாத்திரத்தை ஏற்கவும் முடிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மத்திய அரசின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய கட்சியாக முலாயம்சிங்கின் சமாஜ்வாதி இருந்து வருகிறது. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸும் பிரதான கூட்டணிக் கட்சியாக இருந்து வருகிறது. முலாயம்சிங்குடன் இணைந்து காங்கிரசுக்கு நெருக்கடியை உருவாக்குவதன் மூலம் தம்மால் கிங்மேக்கர் ஆகிவிட முடியும் என்று கணக்குப் போட்டுத்தான் காய் நகர்த்தினார் என்கின்றனர் திரிணாமுல் காங்கிரஸார்
சமாதானமாகும் முலாயம்
காங்கிரசுக்கு எதிராக மூன்று பெயரை அறிவித்ததில் மமதா மீதுதான் காங்கிரஸுக்கு அப்படி ஒரு கோபம். சோனியா காந்தி மதிப்பளித்து டெல்லிக்கு ஆலோசனை நடத்த வரச்சொன்னார். மமதாவோ வந்து டெல்லியில் முகாமிட்டு ஒரு லாபியை உருவாக்கிய பின்னரே சோனியாவை சந்தித்தார். அதுமட்டுமின்றி சோனியாவுடன் பேசிய பேச்சு விவரங்களை பகிரங்கப்படுத்தியதை காங்கிரசால் சகிக்க முடியவில்லை. அந்தக் கோபத்தை இன்று காலை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தினேஷ் திரிவேதி வெளிப்படுத்தியிருந்தார்.
மமதா - காங்கிரஸ் தேனிலவு முறிவு?
இதனால் அனேகமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து மமதா பானர்ஜி வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமாறு பகிரங்கமாக திரிணாமுல் காங்கிரஸுக்கு அந்தக் கூட்டணி அழைப்பு விடுத்திருந்தது.
முலாயம் பல்டி
இதனால் மமதா தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார் என்றே கூறப்படுகிறது. ஆனால் முலாயம்சிங் யாதவ் இப்போதே ஊசலாட்ட மனநிலைக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. மமதாவுக்காகவது தேசிய ஜனநாயகக் கூட்டணி கை கொடுக்கலாம். சமாஜ்வாதிக்கு காங்கிரஸ்தான் கை கொடுத்தாக வேண்டும். இதனால் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் சமாதானப்படலத்தை முலாயம்சிங் ஏற்கத் தொடங்கியிருக்கிறா. அனேகமாக அவர் சோனியாவை மீண்டும் சந்தித்து விவாதிக்கக் கூடும் எனத் தெரிகிறது.