ஓ போடச் சொன்ன முன்னாள் அமைச்சர்: ஓட்டு போட்ட திமுகவினர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி திமுகவினருக்கு இட்ட கட்டளையை பலரும் புறக்கணித்துவிட்டனர்.
புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழக சட்டசபையில் ஜனநாயக கடமை ஆற்றவிடாமல் திமுகவினரை ஆளும் கட்சியைத் சேர்ந்தவர்கள் தடுக்கின்றார்கள். அது போல புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும் எதிர்க் கட்சிகளை கடமை ஆற்ற விடமாட்டார்கள். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இதனால் தான் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தது.
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி பறிபோனபோது எதிர்ப்பு தெரிவித்து 49 ஓவுக்கு வாக்களித்து பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல இந்த இடைத் தேர்தலில் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை என்பதை காட்ட 49 ஓ படிவத்தில் திமுகவினர் ஓட்டுப்போட வேண்டும். ஒவ்வொரு திமுகவினரும் 10 பேரை அழைத்துச் சென்று 49 ஓ படிவத்தில் வாக்களித்தால் சுமார் 60,000 ஓட்டுக்களை பதிவு செய்ய முடியும்.
இதன் மூலம் புதுக்கோட்டையில் திமுகவின் பலத்தை நிரூபிப்போம் என்றார்.
அவரது பேச்சு திமுக தலைமையின் கருத்தா அல்லது அவரது சொந்த கருத்தா என்பது தெரியவில்லை. ஆனால் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக தலைமை புறக்கணித்தது மட்டும் தான் உண்மை.
புதுக்கோட்டை தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 980. கடந்த 12ம் தேதி நடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 277 பேர் வாக்களித்துள்ளனர். இது 73.48 சதவீதமாகும். இதில் 47 பேர் மட்டுமே 49 -ஓ போட்டுள்ளனர். இதன் மூலம் திமுகவினரும் வாக்களித்துள்ளனர் என்பது தெரிகிறது.
ஆக ரகுபதியின் பேச்சுக்கு திமுகவினர் யாரும் மதிப்பு கொடுக்கவில்லை. சரி அப்படி என்றால் அவர்கள் அதிமுக அல்லது தேமுதிக ஆகிய கட்சிகளில் யாருக்கு வாக்களித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை நாங்கள் சுயேட்சைக்குத் தான் வாக்களித்தோம் என்று திமுகவினர் கூறினால் சுயேட்சைகள் பெறும் வாக்குகளை வைத்து கணக்கிட்டால் தெரிந்துவிடும்.
இந்த அளவீட்டில் சுயேட்சைகளின் வாக்கு குறைந்தால்....... ? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகின்றோம்.