துபாயில் மரணை தண்டனை விதிக்கப்பட்ட தமிழரைக் காக்க பிரமதர், அமைச்சர்களுக்கு வைகோ கடிதம்
சென்னை: துபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழனை உடனே காப்பாற்றக் கோரி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அயல்நாடு வாழ் இந்தியர் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
துபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நாதன் என்ற தமிழரை நம்பி வாழும் ஏழைக் குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டி இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். நாதனின் இந்தியக் கடவுச்சீட்டு எண். எப் 3630594. முகவரி: த/பெ எஸ். முத்துவேல், தெற்கு மாதவி கிராமம், சிறுகன்பூர் (அஞ்சல்), சிறுவாச்சூர் (வழி), குன்னம் வட்டம், அரியலூர் மாவட்டம்.
நாதன், துபாயில் கொம்பர்ட் இனிடில் என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார். அஞ்சல் எண். 28811தொலைநகல் எண்: 06-5620990. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நாதனுக்கும், அவருடன் பணிபுரிகின்ற ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஃப்திகார் என்ற ஓட்டுநருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் பொருள்களைக் கடத்திய அந்த ஓட்டுநரின் தவறான நடவடிக்கை குறித்து நாதன் நிறுவன அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததாகச் சந்தேகப்பட்டு, ஓட்டுநர் இஃப்திகார், நாதனைக் கடுமையாகத் தாக்கி இருக்கின்றார். தம்மைக் காத்துக் கொள்ள நாதன் முயன்றபோது நடந்த எதிர்த்தாக்குதலில் ஓட்டுநர் இஃப்திகார் இறந்து போனார்.
நாதன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 2012 ஏப்ரல் 19ம் தேதி வெளியான தீர்ப்பில், நாதனைக் சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாதன் அபுதாபியில் உள்ள முதன்மைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாதனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை, எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம். இந்தச் செய்தியால் நாதனின் ஏழைக் குடும்பம் இடி விழுந்தது போல நிலைகுலைந்து போயுள்ளது. அவரது உறவினர்கள் கண்ணீரில் பரிதவிக்கின்றனர்.
நாதனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டு அவரைக் காப்பாற்றித் தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.
இந்த கடிதத்தை மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் செயலாளரிடம் நேரில் வழங்கினார். மேலும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அஹமதை சந்தித்து அவரிடமும் கணேசமூர்த்தி இது குறித்து வலியுறுத்தினார்.