தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அரசுக்கு ராமதாஸ் புது 'ஐடியா'

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் அதில் உள்ள வசதிகளைப் பொறுத்து தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 95 சதவீத பள்ளிகள் இதை கடைப்பிடிக்காமல் தங்களது விருப்பம்போல கட்டணத்தை வசூலிக்கின்றன.
இதே நிலை தொடர்ந்தால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு தரமான கல்வி என்பது எட்டாக் கனியாகிவிடும்.
எனவே கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து அரசே வசூலித்து பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இந்த திட்டத்துக்கு உடன்பட மறுக்கும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 25 விழுக்காடு இடங்களை அப்பகுதியில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் எந்த தனியார் பள்ளியிலும் ஏழைக் குழந்தைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த பள்ளிகளில் எத்தனை ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications