100 அரசு பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு
நெல்லை: தமிழகம் முழுவதும் 100 அரசு உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு புதிதாக 900 முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
இது குறித்து தமிழக பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபிதா பிறப்பித்துள்ள உத்தரவி்ல் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் 2012-13ம் ஆண்டு கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் உயர் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடம், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாக உயர்த்தப்படும்.
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் ஆகிய 9 பணியிடங்கள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறாக 100 அரசு பள்ளிகளுக்கும் 900 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளிகள் நிலை உயர்த்தப்படும் போது 1-40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதம் பின்பற்றப்படுவதுடன் நடைமுறையில் உள்ள விதிகளை நிறைவு செய்ய வேண்டும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் கூடுதல் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க எம்.எல்.ஏ., எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி உதவியை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை வருமாறு,
திருச்சி-8, அரியலூர், நாகப்பட்டினம், தர்மபுரி, தேனி, திரூவாரூர், பெரம்பலூர் தலா 1, கோவை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருப்பூர் தலா 2, கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி தலா 2, நெல்லை, ஈரோடு, நாமக்கல், திருவள்ளூர், மதுரை, விருதுநகர் தலா 4, காஞ்சிபுரம், தூத்துக்குடி, வேலூர், தலா 6, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் தலா 5 என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.