இலங்கையில் மொழிப் போரரானது இனப் போராகி மதப்போராக உருவெடுத்திருக்கிறது: மனோ கணேசன்
கொழும்பு: இலங்கையில் முதலில் உருவான மொழிப்போரானது இனப்போராக மாறி இன்று மதப்போராக உருமாறி வளர்ந்து இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய சர்வமத மாநாட்டில் மனோ கணேசன் பேசியதாவது:
வட - கிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும்படி உலகம் இன்று ராஜபக்சே அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் இந்த விவகாரம் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
தமிழ் பகுதிகளில் இருந்து இராணுவத்தை வாபஸ் வாங்க அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றது. இதை நாம் ஏற்றுகொள்ள மாட்டோம். அங்கே இராணுவம் சும்மா பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. அது தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை விவகாரங்களில் தலையிடுகிறது. இது தமிழ் மக்களுக்கு தொல்லை தரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆகும்.
வடக்கில் தமிழ் மக்கள் வீடுகளில் நடைபெறும் பிறந்தநாள் விழாக்களுக்கு கூட இராணுவ அதிகாரிகள் அழையா விருந்தாளிகளாக நுழைகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இலங்கை வந்து சென்ற இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா ஸ்வராஜ், நாடு திரும்பியதும் இதை சொன்னார். இந்த செய்தி உலக தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. இதுதான் வடக்கில் உண்மை நிலவரம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதே, அங்கு இராணுவ ஆட்சி நடை பெறுவதை உறுதிப்படுத்துகிறது.
உலகில் எந்த நாட்டு இராணுவமும், சிவில் நியாயங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. இலங்கை வந்த, இந்திய அமைதிபடையும், யாழ்ப்பாணத்தில் அமைதி காக்கவில்லை. அந்த படையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்பாவி மக்களை சுட்டு கொன்றது. இதையேதான் அமெரிக்க, பிரித்தானிய இராணுவங்களும் உலக நாடுகளில் செய்கின்றன. இதுதான் உலகளாவிய இராணுவ கலாச்சாரம். இதைதான் இலங்கை இராணுவமும் வடக்கில் செய்கிறது. இலங்கை இராணுவம் வடக்கில் பௌத்த மத போதனையையா செய்கிறது?
எனவே தேவைக்கு அதிகமாக, ஒரு நிமிஷம் கூட, இராணுவம், மக்கள் மத்தியில் நடமாட கூடாது. அரசாங்கம் தனது சித்து விளையாட்டுகளை நிறுத்தி விட்டு, இராணுவத்தை வாபஸ் வாங்க வேண்டும். காவல் பணிகளை போலீஸ் துறையிடம் கையளிக்க வேண்டும்.
என் வாயில் துப்பாக்கியை வைத்து, பலவந்தமாக என் கையில் தேசிய கொடியை கொடுத்து, என்னை பலவந்தமாக தேசிய கீதம் பாடு என்று சொன்னால், எனக்கு தேசிய உணர்வு வராது என்பதை இங்கு வந்துள்ள கனவான்கள் உணர்ந்துகொள்வார்கள் என நான் நம்புகிறேன்.
தேசிய உணர்வு என்பது உள்ளிருந்து வர வேண்டும். அப்படி அது வரக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இன்று தமிழ் மக்களை சுற்றி அத்தகைய சூழ்நிலை இல்லை. இந்நாட்டில் மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக மாறி, இன்று மதப்போராக உருமாறி வளர்ந்து இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications