குமரி மாவட்டத்தில் 11 குழந்தைகள் காப்பகங்கள் மூடல்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் முறையாக பதிவு செய்யப்படாத தொண்டு நிறுவனங்கள் நடத்தி வந்த 11 குழந்தைகள் காப்பகங்களை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.
குமரி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படுகின்ற குழந்தைகள் காப்பகங்களை பதிவு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 10 குழந்தைகள் உடைய காப்பகம் கட்டாயம் சமூக நல இயக்கத்தில் 3 வருடம் பதிவு பெற்றிருக்க வேண்டும் என குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் 40 தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்படாத தொண்டு நிறுவனங்கள் நடத்திய 9 குழந்தைகள் காப்பகங்கள் குழந்தைகள் நல குழு உறுப்பினர்களால் ஆய்வு செய்யப்பட்டு விதிமீறல் செய்யப்பட்டதால் கடந்த ஏப்ரல் 30ம் தேதி மூடப்பட்டன.
3 ஆண்டு நிரந்தர பதிவுக்காக விண்ணபிக்காத தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்கள் இரு வாரத்திற்குள் பதிவு பெறுவதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது. இல்லையெனில் அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்தார். 31 காப்பகங்களுக்கு 2 வாரம் கெடு விதிக்கப்பட்டிருந்தது. அப்போதும் அந்த காப்பகங்கள் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் அவற்றை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 15ம் தேதி இரவு எட்டாமடை சிஎம்எஸ் காப்பகம் மூடப்பட்டு அங்கிருந்த குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் புறா தொண்டு நிறுவனம் சார்பில் ஜான்சி என்பவர் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகமும் மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications