ஜாமீன் வழங்க லஞ்சம் வழக்கு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிபிஐ நீதிபதி பட்டாபிராமா ராவ் கைது
ஹைதராபாத்: சுரங்க ஊழலில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிபிஐ சிறப்பு நீதிபதி பட்டாபி ராமா ராவ் இன்று கைது செய்யப்பட்டார்.
முன்னாள் கர்நாடக அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி மீதான ஒபுலபுரம் சுரங்க முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீலட்சுமிக்கு ஜாமீன் வழங்க மறுத்த சிபிஐ நீதிபதி பட்டாபிராமா ராவ் வழக்கின் முதன்மை குற்றவாளியான ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுத்திருந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பட்டாபிராமா ராவ் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் 31ம் தேதி ஆந்திர உயர் நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில் பட்டாபிராமா ராவின் மகனுக்கு சொந்தமான 5 லாக்கர்களில் இருந்து 1.60 கோடியும், ஓய்வு பெற்ற ஆந்திரா நீதிபதி சலபதி ராவின் சகோதரர் பாலாஜி ராவிடம் இருந்து ரூ.1.40 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஜாமீன் வழங்க லஞ்சம் கொடுத்தது தொடர்பாக பட்டாபிராமா ராவ், சலபதி ராவ், ஜனார்த்தன ரெட்டியின் அண்ணன், பெல்லாரி எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் பட்டாபிராமா ராவின் மகன் ரவிச்சந்திரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி டிவி சலபதி ராவ் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள பட்டாபிராமா ராவ், சலபதி ராவ், சலபதி ராவின் உறவினர் பி. ஸ்ரீனிவாஸ் ராவ், மூத்த வழக்கறிஞர் உமா மகேஷ்வர் ராவ் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் சில முக்கியமான பொருட்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் இதே வழக்கில் பட்டாபிராமா ராவ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications