'சற்றே விலகியிரும் பிள்ளாய்'... கலாமுக்கு அட்வைஸ் செய்த ஆசிரியர்!

அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க மமதா பானர்ஜி மிகக் கடுமையாக முயன்றார். அவரது திடீர் ஆவேச நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியே சற்று ஆடித்தான் போனது. ஆனாலும் பிரணாப் முகர்ஜியை அது வேட்பாளராக அறிவித்து விட்டது. அதேசமயம், பாஜக செய்த குழப்பத்தாலும், முடிவு எடுக்க முடியாமல் திணறியதாலும் அப்துல் கலாமுக்கு போதுமான ஆதரவு கிடைப்பதில் சிக்கலாகி விட்டது. இதையடுத்து தான் போட்டியிடும் எண்ணத்தில் இல்லை, அதற்கு எனது மனசாட்சி இடம் தரவில்லை என்று கூறி விட்டார் அப்துல் கலாம்.
அவரது இந்த முடிவுக்கு கலாமின் ஆசிரியர் சின்னத்துரையும், 96 வயதான அவரது மூத்த சகோதரர் முத்துமீரான் மரைக்காயருமே காரணம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரிடமும் கலாம் ஆலோசனை கேட்டதாகவும், அவர்கள் நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகள் உங்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி விடும், எனவே ஒதுங்கியிருப்பதே நல்லது என்று ஆசிரியர் சின்னத்துரை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினாராம். இதேபோன்ற கருத்தையே அவரது உறவினர்களும், நெருக்கமான நண்பர்களும் கூறவே, சரி ஒதுங்கி விடுவது என்ற முடிவுக்கு வந்தார் கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications