பாஜக பிரதமர் வேட்பாளர் யார்?: இப்போதே அறிவிக்க வேண்டும்!-நிதிஷ் கருத்தை வழிமொழிந்த சிவசேனா!
மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் பெரும் குழப்பத்தில் சிக்கித் தவித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் தொடங்கிவிட்டன...
ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறியிருந்ததுடன் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப் போவதாக அறிவித்து பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிவசேனாவும் நிதிஷ் பாணியில் எங்களுக்கு பிரதமர் வேட்பாளர் யார்னு இப்பவே சொல்லனும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
மேலும் பாரதிய ஜனதாவே ஒரு வேட்பாளரை முன்மொழியக் கூடாது என்றும் ஒட்டுமொத்தமாக கூட்டணிக் கட்சிகளிடம் கலந்து பேசி அனைத்து கட்சிகளும் ஏற்கக் கூடிய வகையிலான ஒருவரைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் சிவசேனாவின் மாநிலங்களவைத் தலைவர் பரத்குமார் ரெளத் கூறியிருக்கிறார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே முடிவெடுக்க முடியாமல் திணறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு இபப்வே முடிவெடுத்துவிட்டாலும் ...என்பதுதான் டெல்லியில் கேட்கும் குரலாக இருக்கிறது.