குடியரசுத் தலைவர் தேர்தல்: முடிவெடுக்க முடியாமல் பாஜக கூட்டணி
அண்மையில் சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஜெயலலிதாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கிண்டலாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி போன்றெல்லாம் இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்காமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டென திடமான முடிவை எடுக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு.
பாரதிய ஜனதாவின் உயர்நிலைக் கூட்டம் அதன் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் என்றெல்லம் தொடக்கம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் முடிவெடுக்கத்தான் பல நாட்களாகிறது.
இந்த நிலையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவோ நாங்கள் பிரணாப்பையே ஆதரிக்கப் போகிறோம் என்று அறிவித்துவிட்டது. மற்றொரு முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளமும்கூட பிரணாப் முகர்ஜியையே தங்களது முதன்மைத் தேர்வாக வைத்திருக்கிறது
கூட்டணிக் கட்சிகள்தான் என்றில்லை.. உள்கட்சி குத்துவெட்டையும் பாஜக சந்திக்க நேரிட்டிருக்கிறது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தி அதிரடியாக பிரணாப் முகர்ஜி வீட்டுக்கே போய் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று கூட இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அக்கூட்டத்திலும் கூட நிச்சயம் ஒருமித்த கருத்து ஏற்படு என்று கூறுவதற்கில்லை. பிரணாப் முகர்ஜியை ஆதரித்துவிட்டுப் போகலாம் என்று ஒரு தரப்பும் சங்மாவை ஆதரித்தால் என்ன என்று மற்றொரு தரப்பும் வாதிடப் போகிறது. இறுதியில் என்ன முடிவு எடுத்தாலும் ரகசிய வாக்கெடுப்பு என்பதால் அவரவர் விருப்பத்துக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள்.
நாட்டின் மிக முக்கியமான தேர்தல் குடியரசுத் தலைவர் தேர்தல். இதில் கூட நாட்டின் பிரதான கூட்டணிகள் முடிவு எடுக்க இத்தனை தயக்கம் காட்டுவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல.