2வது கணவருக்குப் பிறந்த 4 மாத ஆண் குழந்தை கடத்தி கழுத்தை நெரித்து கொலை
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் 4 மாத ஆண் குழந்தை கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். ஸ்டீல் பட்டறையில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி கோமதி. அவர்களுக்கு லிபியா(4) என்ற மகளும், கோகுல்(4 மாத குழந்தை) என்ற மகனும் உள்ளனர். நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோகுல் மாயமானான். உடனே பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். குழந்தை கிடைக்காததால் ஆர்.கே. நகர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் (பொறுப்பு) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ராஜேஷ் வீட்டுக்கு பின்புறத்தில் குழந்தை பிணமாகக் கிடந்தது. குழந்தையை யாரோ கடத்திச் சென்று கழுத்தை நெரி்த்துக் கொன்று பிணத்தை ராஜேஷ் வீட்டுக்கு பின்புறத்தில் வீசியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலைக் கைப்பற்றி அதை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோலின் தாய் கோமதி ஏற்கனவே திருமணமானவர். முதல் கணவரான மோகனுக்கும், கோமதிக்கும் பிறந்தவர் தான் லிபியா. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோமதி மோகனைப் பிரிந்து குழந்தை லிபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகே ராஜேஷை மணந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோகுலை பெற்றெடுத்தார். அதனால் கொலைக்கு இரண்டாவது திருமணம் காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ராஜேஷின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு குழந்தை கொல்லப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.