நாகை டாஸ்மாக் கடையில் தீ: ஒருவர் பலி-ரூ.5 லட்சம் மதுபானங்கள் நாசம்
நாகை: நாகையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்தவர் பலியாகினார். மேலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் வெடித்துச் சிதறின.
நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜ் கட்டிடத்தின் கீழ் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இன்று அதிகாலை பூட்டியிருந்த கடையில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ ஆக்ரோஷமாக எரிந்தது. இதில் கடையில் இருந்த மதுபாட்டில்கள் வெடித்துச் சிதறின. கடையில் பிடித்த தீ மள, மளவென லாட்ஜுக்கும் பரவியது.
இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடன் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். லாட்ஜ் அறைகளுக்கும் புகை மூட்டத்துடன் தீ பரவியதில் அங்கு தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த பக்ருதீன்(45) புகை மூட்டத்தால் மூச்சு திணறி மயங்கினார். மேலும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது தவுசிக் அலி(15) என்பவர் காயம் அடைந்தார்.
அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பக்ருதீன் சிகிச்சை பலனின்றி பலியானார். பக்ருதீனும், அலியும் கன்னியாகுமரியில் உள்ள மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றினர். பணி நிமித்தமாக நாகைக்கு வந்த அவர்கள் லாட்ஜில் தங்கியிருந்தபோது தான் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. விபத்திற்கு மின் கசிவு தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து நாகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.