செங்கோட்டை தாசில்தார், துணை தாசில்தார்கள் மீது மணல் கடத்தல் கும்பல் கல்வீச்சு
செங்கோட்டை: செங்கோட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை மணல் கடத்தல் கும்பல் கல்வீசி தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை தாசில்தாராக இருப்பவர் தங்கவேலு. அவர் தலைமையிடத்து துணை தாசில்தார் சாம்பவமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன், ஜீப் டிரைவர் முருகன் ஆகியோருடன் நேற்று நள்ளிரவு லாலாகுடியிருப்பு என்னும் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சோதனை நடத்த சென்றார்.
பட்டுபூச்சி என்ற பகுதியில் அவர்கள் ஜீப்பில் செல்லும்போது ஒரு டிராக்டர் மணலை ஏற்றிக் கொண்டு கீழே நோக்கி வந்துள்ளது. அந்த டிராக்டரை அதிகாரிகள் குழுவினர் நிறுத்த முயன்றனர். ஆனால் டிராக்டர் நிற்காமல் சென்றதால் அதிகாரிகள் குழு டிராக்டரை விரட்டியுள்ளது. அதற்குள் அக்கும்பல் டிராக்டரை ஒரு இடத்தில் நிறுத்திவி்ட்டு டி்ப்பரை மட்டும் கழற்றிவிட்டு என்ஜினுடன் ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த குழுவினர் டிப்பர் வாகனத்தை கைப்பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தபோது திடீர் திடீர் என மர்ம கும்பல் அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் துணை தாசில்தார் சம்பவ மூர்த்தியின் காலில் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் உயிருக்கு பயந்து ஜீப்பில் ஏறிச் சென்றுவிட்டனர்.
அக்கும்பல் ஜீப்பின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் வாகனத்தின் முன்பகுதியும், இடது பக்க கண்ணாடியும் உடைந்தது. அதிகாரிகள் குழுவினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் குழு மீது கல்வீசி தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இத்தாலுகா அலுவலக துணை தாசில்தார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications