ரூ. 29,000 லஞ்சம் வாங்கிய வேலூர் மாநகராட்சி பொறியாளர் தியாகராஜன் கைது
வேலூர்: கான்ட்ராக்டரிடம் ரூ.29,000 லஞ்சம் வாங்கிய வேலூர் மாநகராட்சி மண்டல பொறியாளர் தியாகராஜன் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வேலூர், வேலப்பாடி தாண்டவராயன் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன்(50). வேலூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் மண்டலப் பொறியாளராக உள்ளார். அவரது வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர் தங்கராஜ். மாநகராட்சி கான்ட்ராக்டர்.
கடந்த 2009ம் ஆண்டு வேலூர், வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் ரூ.15 லட்சத்தில் பூங்கா அமைக்க டெண்டர் எடுத்து அந்த பணியை தங்கராஜ் முடித்து கொடுத்துள்ளார்.இதனையடுத்து மாநகராட்சியில் பணம் பெறத் தேவையான ஆவணங்களை சமர்பித்துள்ளார். ஆனால் டெண்டருக்கான பணம் பல மாதம் ஆகியும் வரவில்லை. இது குறித்து வேலூர் மாநகராட்சி மண்டல பொறியாளர் தியாகராஜனிடம் தங்கராஜ் கேட்டபோது ரூ. 29,000 லஞ்சம் கொடுத்தால் பணம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தங்கராஜ் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரையின் பேரில் பொறியாளர் தியாகராஜன் வீட்டுக்கு சென்ற தங்கராஜ் ரசாயனப் பொடி தடவிய பணத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தியாகராஜனை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.