மீட்பு நடவடிக்கைகள் சரியில்லை... மஹியின் தாயார் கண்ணீர்
ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கையில் 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள். சிறுமி கிணற்றுக்குள் விழுந்து ஒன்றரை மணி நேரம் கழி்த்து தான் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மறுநாள் காலை முதல் தான் மீட்புப் பணிகள் முழுவீச்சில் தொடங்கின. சிறுமியை மீட்க ராணுவ ஜவான்கள் கடந்த 3 நாட்களாக போராடி இன்று பிற்பகல் வாக்கில் மீட்டு கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட 85 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மீட்பு முயற்சி நீண்டதால் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சிறுமியை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து சிறுமியின் தாயார் சோனியா அதிருப்தி வெளியிட்டிருந்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் குழந்தையை எப்பொழுது தான் மீட்பார்களோ. எனக்கு எனது மகள் உயிருடன் வேண்டும். அவளைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். மஹியை இன்னும் 5 நிமிடத்தில் மீட்டுவிடுவோம் என்று கடந்த 4 நாட்களாகக் கூறுகிறார்கள். மீட்புக் குழுவினர் என்ன தான் செய்கிறார்கள் எப்பொழுது தான் என் மகளை மீட்பார்கள் என்றே தெரியவில்லை. தயவு செய்து எனது மகளை எனக்கு உயிருடன் மீட்டு்க கொடுங்கள் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார் அவர்.