தீவிபத்து ஏற்பட்ட அரங்கில் ஆவணம் ஏதுமில்லை- உள்துறை அமைச்சகம்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சக வளாகத்தில் இன்று நடந்த தீவிபத்தில் எந்தவிதமான ஆவணமும் சேதமடையவில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இன்று பிற்பகலில் நார்த் பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. குபுகுபுவென எரிந்த தீயை, தீயணைப்புப் படையினர் துரித கதியில் செயல்பட்டு உடனடியாக அணைத்து விட்டனர்.
மும்பையில், மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் நடந்த பயங்கர தீவிபத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் தீவிபத்து ஏற்பட்டதால், அதிலும் பலத்த பாதுகாப்புமிக்க நார்த் பிளாக்கிலேயே தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தீ உடனடி்யாக அணைக்கப்பட்டு விட்டது. நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது.
தீவிபத்து நடந்த இடம், மாநாட்டுக் கூடமாகும்.இங்கு ஆவணங்கள் ஏதும் இல்லை. மேலும், அரங்கின் ஜன்னல் கதவு மட்டுமே சேதமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.