ஒரு சரக்கு லாரியும் கேரளாவுக்குப் போகாது... லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
நாமக்கல்: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை கேரளா கைவிடாவிட்டால் தமிழகத்திலிருந்து ஒருலாரி கூட கேரளாவுக்குப் போகாது என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மூக்குடைபட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய பிரச்சினையைக் கிளப்பி தமிழகத்துடன் மோத ஆரம்பித்துள்ளது கேரள அரசு. நீர்ப்பாசனத் திட்டத்துக்காக என்று கூறி சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடி என்ற இடத்தில் தடுப்பணை கட்டும் முயற்சிகளில் கேரளத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
சிறுவாணி ஆறுதான் கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரம். அது மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறுவாணி அணையிலிருந்துதான் கோவைக்கு குடிநீர் விநியோகமாகி வருகிறது.
இந்த நிலையில் அட்டப்பாடியி்ல் கேரளா அணை கட்டினால் கோவைக்கு குடிநீர் விநியோகம் தடைபடும். மேலும் பவானி ஆற்றுக்கும் நீர் வரத்து அடியோடு நின்று போகும்.அதாவது கோவை மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளை தண்ணீர் இல்லாமல் தவிக்க விடும் சதியாகவே கேரளாவின் இந்த தடுப்பணை நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இந்த அடாவடியான, மனித நேயமற்ற திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மீண்டும் கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கேரளாவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் நல்லதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரள மாநில அரசு சிறுவாணி மற்றும் பவானி ஆறுகளில் புதிய தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இது தமிழக விவசாயிகளின் நலனை மிகவும் பாதிக்க செய்யும்.
மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் உருவாவதுடன், விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பாலைவனம் ஆகும் நிலை ஏற்படும். எனவே இந்த திட்டத்தினை கேரள அரசு கைவிட வேண்டும்.
தினந்தோறும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் சென்று வருகின்றன. இவற்றில் கேரளாவிற்கு தேவையான அனைத்து உணவுப்பொருட்களும், பால் மற்றும் சிமெண்ட் போன்ற அத்தியாவசிய பொருட்களும் எடுத்துச்செல்லப்படுகிறது.
கேரள அரசு சிறுவாணி, பவானி ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டத்தினை கைவிடவில்லை எனில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்படும். மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கேரளாவைச் சேர்ந்த லாரிகளும் கேரள மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.