மின்கசிவால் ரூ.2 கோடி காற்றாலை எரிந்து நாசம்: மின் உற்பத்தி பாதிப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் 200க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. தற்போது காற்று வேகமாக வீசுவதால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. பணகுடி அண்ணாநகர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் 60 காற்றாலைகள் உள்ளன. இதில் 15 காற்றாலைகள் நெல்லையைச் சேர்ந்த தனியார் நிறுவனதிற்கு சொந்தமானவை.
நேற்று மாலை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் திறனுள்ள ஒரு காற்றாலையில் மின்கசிவால் தீப் பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் காற்றாலை இயந்திரத்தின் பின்பகுதி முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. தொடர்ந்து கரும் புகை எழுந்தது.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையம் மற்றும் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதி காற்றாலை மற்றும் வீடுகளுக்கான மின் வினியோகத்தை துண்டித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் இயந்திரத்தின் இறக்கை தவிர பிற பாகங்கள் தீயில் உருகி வழிந்தோடியது.
இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள இயந்திரம் நாசமாகியுள்ளது. தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட காற்றாலைகள் 4 மணி நேரம் இயங்கவில்லை. இதனால் சுமார் 10 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications