தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டம்: பீடித் தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு
நெல்லை: பீடித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியிடக் கோரி தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் ராஜாங்கம் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் உள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம், பஞ்சப்படி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியாக 12.10.2010ல் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
முத்தரப்பு ஒப்பந்தப்படி ஊதிய உயர்வை குறைந்தபட்ச ஊதியமாக அறிவிக்க கடந்த கால நடைமுறையின் படி 28.2.2011 அன்று முதனிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு 60 நாட்கள் அவகாசம் கொடுத்து இறுதி அறிவிப்பு வெளியிட வேண்டும். பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய இறுதி அரசாணை வெளியிட வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை.
ஏப்ரல் மாதம் 17ம் தேதி தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தின்போது மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் 18ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஒரு மாதத்திற்குள் உரிய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊதிய உயர்வு அரசாணை வெளியிட மறுக்கும் த்மிழக அரசை கண்டித்து தலைமைச் செயலகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது என்றார்.