சோனியாவை வாட்டுவது என்னவென்று மன்மோகனுக்கு தெரியும்: முன்னாள் சிஐஏ அதிகாரி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்ன வியாதிக்காக கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியும் என்று முன்னாள் சிஐஏ அதிகாரி புரூஸ் ரீடெல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள ஸ்லோன்-கெட்டரிங் மெமோரியல் கேன்சர் சென்டரில் அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் கணையப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்பட்டது. அவருக்கு என்ன பிரச்சனை என்பதை ரகசியமாகவே வைத்துள்ளனர்.
இந்நிலையில் சோனியா காந்திக்கு என்ன பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை நடந்தது என்பது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியும் என்று முன்னாள் சிஐஏ அதிகாரி புரூஸ் ரீடெல் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெய்லி பீஸ்ட் என்ற இணையத்தளத்தில் கூறியிருப்பதாவது,
சோனியாவின் உடல்நலம் குறித்த மர்மம் இந்திய தலைவர்களை நிலைதடுமாற வைத்துள்ளது. சோனியா எதற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார் என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. ஆனால் இந்திய தலைவர்கள் பலருக்கு தெரியாத அந்த ரகசியம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியும். சோனியா புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாக ஊடகங்கள் கணித்து செய்தி வெளியிட்டன. ஆனால் அந்த செய்தி உறுதிபடுத்தப்படவில்லை.
சோனியா தனது மாமியார் இந்திரா காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். தற்போது அவர் தனது முன்மாதிரியான இந்திரா போன்று செயல்பட முயற்சிப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். முதலில் அரசியலுக்கு வரத் தயங்கிய அவர் தற்போது அதிகாரமிக்க பெண்ணாக உள்ளார்.
சோனியா காந்தியின் எதிர்காலத்திட்டம் பற்றி எழும்புயுள்ள கேள்விகள் மற்றும் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டார் என்ற செய்தி இந்தியாவை சற்றே தடுமாற வைத்துள்ளது. பொருளாதார சீர்திருத்தம் மற்றும் முதலீட்டு விதிமுறைகள் குறித்த சில முடிவுகள் தள்ளிப் போடப்பட்டன. பொருளாதாரம் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்றைய உலகில் அதிகாரமிக்க பெண்மணி சோனியா தான். ஏன் உலக வரலாற்றிலேயே சோனியா தான் அதிகாரமிக்க பெண்மணி என்றார்.