'சபாஷ் சலேம்'...அபு சலேமுக்கு பாராட்டுடன் ஜாமீனையும் வழங்கிய டெல்லி கோர்ட்!
டெல்லி: போர்ச்சுகல் நாட்டிலிருந்து நிபந்தனையுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் நிழல் உலக தாதா அபு சலேமுக்கு டெல்லி கோர்ட் ஒன்று, சிறையில் அவர் சிறந்த நன்னடத்தையுடன் திகழ்வதாக பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு கடத்திப் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனும் அளித்துள்ளது.
இருப்பினும் சலேம் மீது மேலும் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரால் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளியே வர முடியாது.
கடந்த 2002ம் ஆண்டு ஒருவரைக் கடத்தி வைத்து பணம் பறித்ததாக சலேம் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டை அணுகினார் சலேம். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோத்யாதவ், சலேமுக்கு ரூ. 1 லட்சம் தனி நபர் ஜாமீன் மற்றும் அதே தொகையிலான ஒரு நபர் ஜாமீன் உத்தரவாதத்தில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இருப்பினும் சலேம் மீது மேலும் ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில்தான் இருக்க வேண்டும்.
நீதிபதி தனது உத்தரவின்போது சலேமைப் பாராட்டவும் செய்தார். அவர் கூறுகையில், இந்த வழக்கில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டார் சலேம். இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை கொடுத்தாலும் கூட 7 வருடங்கள் கிடைக்கலாம்.
ஒரு வழக்கில் ஒரு குற்றவாளிக்கு அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, அதில் பாதி ஆண்டுகளை அவர் சிறையில் கழித்து விட்டால் ஜாமீன் தரலாம் என்று சட்டம் கூறுகிறது. அதன் அடிப்படையில் சலேமுக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது.
மேலும் சிறையில் நல்ல நன்னடத்தையுடன் சலேம் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது. குற்றம் சாட்டப்பட்ட சலேம் மீது இதுவரை எந்தவிதமான புகாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது என்றார்.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் அபு சலேம். பல காலமாக தலைமறைவாக இருந்து வந்த அவரை போர்ச்சுகல் நாட்டிலிருந்து சிபிஐ அதிகாரிகள்நாடு கடத்திக் கொண்டு வந்தனர். ஆனால் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படக் கூடாது என்று போர்ச்சுகல் நாட்டு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications