அங்கிட்டுப் போவோமோ, இல்லாட்டி இங்கிட்டு போவோமா... குழப்பத்தில் மதுரை திமுக!
சமீபத்தில் சென்னையில் திமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதை மு.க.அழகிரி புறக்கணித்து விட்டார். கூட்டம் கூடி படு சூடாக விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் மதுரை அருகே தனது பண்ணை வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். அதேசமயம், அன்று மாலை நடந்த பொதுக் கூட்டத்திற்கு வராமல் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார்.
மொத்தத்தில் கருணாநிதியின் இரு புதல்வர்களும் மாறி மாறி புறக்கணித்ததால், திமுகவினர் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர். இருந்தாலும் இதைத் தட்டிக் கேட்க முடியாத நிலை திமுகவினருக்கு.
இந்த நிலையில் ஸ்டாலின், அழகிரியின் அடுத்த கட்ட மோதல் சிறை நிரப்பும் போராட்டம் மூலமாக கிளம்பியுள்ளது.
சிறை நிரப்பும் போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக மு.க.அழகிரி தலைமையில் மாவட்ட பொதுக் குழுவைக் கூட்டியுள்ளனர். அதேபோல திமுக இளைஞர் அணி சார்பில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த இளைஞர் அணிக் கூட்டமானது, ஸ்டாலின் ஆதரவாளர்களின் கூட்டமாகும்.
இந்தக் கூட்டத்தில் எதில் பங்கேற்பது என்பது தெரியாமல் மதுரை திமுகவினர் குழப்பமடைந்துள்ளனராம்.
தற்போது மதுரை மாநகர திமுக செயலாளர் தளபதி கைதாகி சிறையில் அடைபட்டிருக்கிறார். இதையடுத்து அவருக்குப் பதில் துணைச் செயலாளரான உதயக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு கட்சித் தலைமையும் அனுமதி அளித்துள்ளதாம். உதயக்குமார், அழகிரியின் ஆதரவாளர் ஆவார்.
அழகிரிக்குச் சொந்தமான தயா கல்யாண மண்டபத்திலேயே கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அழகிரியும் பங்கேற்கிறார்.
ஆனால் திடீரென இளைஞர் அணி சார்பில் ஒரு கூட்டத்தை இன்று கூட்டியுள்ளனர். இதனால்தான் திமுகவினர் குழப்பமடைந்துள்ளனர்.
இதனால் யாரிடம் போவது, எந்தக் கூட்டத்தில் பங்கேற்பது என்பது தெரியாமல் திமுகவினர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.