அபு ஜிண்டால் கைது: பாகிஸ்தானுக்கு செளதி அரேபியா-அமெரிக்கா தந்த டெர்ரர் "ஷாக்" !

சர்வதேச அரங்கத்தில் பல்வேறு விவகாரங்களில் தனித்தே விடப்பட்டிருக்கும் பாகிஸ்தானால் அபு ஜிண்டால் கைது விவகாரத்தில் கை பிசைந்துதான் நிற்க முடியுமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது!
சவூதியா...?
அபு ஜிண்டால் சவூதி அரேபியாவில் இருக்கும் தகவலை இந்தியாவுக்கு தெரிவித்ததே அமெரிக்க உளவுத் துறைதான் என்கின்றனர்.
சவூதி அரேபியாவா இந்தியாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது என்பதுதான் பாகிஸ்தானின் ஆகப் பெரிய கேள்வி. ஏனெனில் அமெரிக்காவைவிட தமது நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் மிக நெருங்கிய நட்புறவு கொண்ட நாடாக சவூதியை கருதுகிறது பாகிஸதான். அமெரிக்காவும் பாகிஸ்தானுடன் ராணுவ உறவு வைத்துள்ள நாடுதான். இரண்டு நாடுகளுமே இப்படி காலைவாரிவிடும் என்று நினைத்துப் பார்க்காததால் பாகிஸ்தான் இப்போது உர்ர்ர்ரென இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு நெருக்கடி
அதுமட்டுமல்ல. மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்புககான நேரடித் தொடர்பு பற்றி அபு ஜிண்டால் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை பாகிஸ்தானால் நிராகரித்துவிடவும் முடியாது, இதனால் அந்த நாட்டுக்கு இன்னமும் கூடுதல் நெருக்கடிதான் ஏற்படும். ஏனெனில் ஜிண்டால்தான் மும்பை தாக்குதல் ஆபரேஷனை நடத்திய கராச்சி கண்ட்ரோல் ரூமில் இருந்தவன் என்பதால் இதை அவ்வளவு எளிதாக பாகிஸ்தான் மறுத்துவிட்டுப் போக முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மும்பை தாக்குதல் தொடர்பாக எத்தனையோ ஆவணங்களை பாகிஸ்தான் முன் வைத்திருக்கிறது இந்தியா. ஆனால் இந்த முறை வலுவான ஆதாரம் எனும் பந்தை வீசியிருக்கிறது. நிச்சயமாக இந்த பந்தில் பாகிஸ்தான் அவுட் ஆகித்தான் தீரவேண்டிய நிலைமை. வேறுவழியில்லை என்பதே யதார்த்தமான நிலை என்கின்ற்னர் ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications