மதுரை ஹைகோர்ட் வக்கீலுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் கைது
மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் கொடி சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி அருகே உள்ள காடனேரியில் மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதிக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியை தனக்கு வாங்கித் தரும்படி திருமங்கலம் திமுக முன்னாள் யூனியன் சேர்மனும், தற்போதைய செக்கானூரணி திமுக ஒன்றிய கவுன்சிலருமான கொடி சந்திரசேகர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் திருப்பதி என்பவரிடம் முன் பணமாக ரூ. 15 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் குவாரியும் கிடைக்கவில்லையாம், கொடுத்த பணமும் திருப்பிக் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் திருப்பதி நின்று கொண்டிருந்தபோது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட கொடி சந்திரசேகர், தான் கொடுத்த பணத்தை உடனே தராவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திருப்பதி இது குறித்து திருமங்கலம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் கொடி சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நில அபகரிப்பு வழக்கில் மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதியுடன் கொடி சந்திரசேகர், ஏற்கனவே சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications