ஈரோடு அருகே ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ- பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
சென்னையிலிருந்து புறப்பட்டு சென்ற ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சென்னையிலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழைக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஈரோடு ரயில் நிலையம் வந்து மீண்டும் பெருந்துறை, கோவை வழியாக செல்ல புறப்பட்டது. அப்போது ரயில் கடைசி பெட்டியில் தீ கொழுந்து விட்டு எரிவது தெரியவந்தது. உடனடியாக ரயில்வே அதிகாரிகள் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். இதனால் உடனே ரயில் நிறுத்தப்பட்டது. கடைசி பெட்டியில் இருந்த பயணிகள் வேகமாக வெளியேற்றப்பட்டனர். மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும் வெளியேறினர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை போராடி அணைத்தன. ஆனால் ரயிலின் கடைசி பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் அந்த மார்க்கத்தில் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.
ரயில் பெட்டியின் அடியில் உள்ள பேட்டரி சூடாகி தீ பிடித்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுதான் உண்மையான காரணமா? என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.