பிரணாப் முகர்ஜியை ஆதரித்த பீகார் மாநிலத்துக்கு ரூ20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி - திட்டக் குழு ஒப்புதல்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரித்ததற்கு பலனாக பீகார் மாநிலத்துக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பீகார் மாநிலமானது மத்திய அரசிடம் இருந்து ஆண்டு தோறும் ரூ4 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் பெற்று வந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபோது மத்திய அரசு அளித்த உறுதிமொழியைக் கூட கடந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் போதுதான் பீகார் மாநில அரசால் பெற முடிந்தது. ரூ10 ஆயிரம் கோடியை கடந்த ஆண்டு பீகார் பெற்றிருந்தது.
இருப்பினும் தமது மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் டெல்லி சென்ற நிதிஷ்குமார் திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியாவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் முடிவில் 2012-13 ஆம் ஆண்டுக்கு ரூ20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 30 விழுக்காடு அதிகமாகும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு சிறப்பு நிதியாக ரூ20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.
தமிழக அரசும் தொடர்ந்தும் சிறப்பு நிதி ஒதுக்கக் கோரிய நிலையிலும் கூட ரூ 3 ஆயிரம் கோடிதான் மத்திய திட்டக் குழு ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications