சென்னையில் கைக்குழந்தைகளுடன் போராட்டம்... தரதரவென இழுத்து வேனில் ஏற்றிய போலீஸ்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பா முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றோரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடமையாக்கவும் இலவச கட்டாய கல்வியை வழங்கக் கோரியும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முனன்ணியினர் அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 50க்கும் மேற்பட்ட பெண்களும் மாணவர்களும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன்பாக ஒன்று திரண்டு ஊர்வலமாக உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றபோது அனைவரும் கை கோர்த்தபடி தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் யாரையும் கைது செய்ய முடியாத நிலை எற்பட்டது.
இதனால் ஒவ்வொருவரையும் வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போய் வேனில் ஏற்றினர். போலீசாருடன் செல்ல மறுத்த மாணவர்களும் பெண்களும் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் கைக் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களும்கூட தப்பவில்லை.
இதனால் அவர்கள் கொண்டு வந்த பதாகைகள், அந்த இயக்கத்தின் கொடி மற்றும் கைது செய்யப்பட்டோரின் செருப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததைப் பார்க்கும்போது போர்க்களம் போல் காட்சியளித்தது.