ஏடிஎம்மில் பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடும் போலீசார்!
நெல்லை: வள்ளியூர் ஏடிஎம்மில் இன்று காலை பச்சிளம் குழந்தை கைவிடப்பட்டு கிடந்தது. இக்குழந்தையை அங்கு கைவிட்டு சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோடு பாத்திமா கிறிஸ்தவ ஆலயம் அருகே ஐ.ஓ.பி. வங்கியின் ஏடிஎம் இயங்கி வருகிறது. இன்று காலை ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவர்களுககு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏடிஎம் அறைக்குள் பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தை கதறி அழுது கொண்டிருப்பது.
இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜிஸ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்களில் சிலர் அந்த குழந்தையை எங்களிடம் கொடுத்து விடுங்கள் நாங்கள் வளர்க்கிறோம் என்று கூறினர்.
அதற்கு மறுத்த போலீசார் அனாதையாக கிடந்தது என்பதற்காக குழந்தையை நாங்கள் இஷ்டப்படி கொடுக்க முடியாது. நெல்லையில் உள்ள தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் இது சேர்க்கப்படும். அங்கு உரிய முறையில் அணுகுங்கள் என்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஏடிஎம் சென்டரில் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற தாயை, போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.