ஹைதராபாத்தில் ஆதரவு திரட்டிய பிரணாப்புக்கு சோதனை மேல் சோதனை...
ஹைதராபாத்: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி ஆதரவு திரட்ட ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்துக்கு சென்ற இடத்தில் பல சோதனைகளை சந்திக்க நேரிட்டிருக்கிறது.
ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹாலில் பிரணாப் முகர்ஜியின் ஆதரவு கோரும் கூட்டம் நடைபெற்றது. இந்த ஹாலுக்கு வரும் முன்பே விமான நிலையத்தில் தெலுங்கானா ஆதரவு குழுவினர் பிரணாப் முகர்ஜியை காரை வழிமறிக்க முயற்சித்தனர். தெலுங்கானா விவகாரத்தில் பிரணாப் முகர்ஜியின் நிலை என்ன என்பதை பகிரங்கப்படுத்தக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்தத் தடையைத் தாண்டி ஜூப்ளி ஹாலில் கூட்டத்தையும் நடத்தி முடித்துவிட்டு பிரணாப் முகர்ஜி வெளியேறிய 10-வது நிமிடத்தில் மீண்டும் பரபரப்பு. ஜூப்ளி ஹாலின் ஒரு பகுதியில் மின்கசிவால் தீ பற்றி எரிந்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தமக்கு ஆதரவு கோரி தமிழ்நாட்டுக்கு வந்த பிரணாப் முகர்ஜிக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்திலோ அடுத்தடுத்து சோதனைகளையே பிரணாப் சந்திக்க நேர்ந்தது.












Click it and Unblock the Notifications