உலகின் ஒரே சமஸ்கிருத நாளிதழுக்கு வந்த கதியைப் பார்த்தீர்களா?
கடந்த 1970ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி சமஸ்கிருத அறிஞரான கே.என். வரதராஜ ஐயங்காரால் துவங்கப்பட்டது சுதர்மா என்னும் சமஸ்கிருத நாளிதழ். மைசூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுதர்மா தான் உலகிலேயே சமஸ்கிருதத்தில் வரும் ஒரே நாளிதழ் ஆகும். இந்த நாளிதழுக்கு ஜாம்பவான்கள் பலர் ஆதரவளித்து வந்தனர். ஆனால் தற்போது கணவன், மனைவி மட்டுமே பெரும் போராட்டத்திற்கு இடையே நாளிதழை நடத்தி வருகின்றனர்.
போதிய பொருளாதார வசதியில்லாமல் நாளிதழை நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது என்று அதன் வெளியீட்டாளர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுதர்மா ஆசிரியர் சம்பத் குமார் கூறுகையில்,
இந்த நாளிதழ் எங்களுக்கு ஒரு இயக்கத்தை போன்றது. பல்வேறு தடைகளைத் தாண்டி இதை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார்.
அவருக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று 2 மாதங்கள் கழித்து தற்போது தான் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
நாளிதழின் வெளியீட்டாளர் ஜெயலட்சுமி கூறுகையில்,
நாங்கள் இந்த நாளிதழை லட்சியத்துடன் நடத்தி வருகிறோம். அதனால் எக்காரணம் கொண்டும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம். எங்கள் ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
4,000 சந்தாதாரர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அமைப்புகளைக் கொண்டே இயங்குகிறோம். செய்தி, செய்திக் கண்ணோட்டம் என்று நாளிதழுக்கான அம்சங்களுடன் இயக்கி வருகிறோம். சமஸ்கிருத மொழி மற்றும் அதன் இலக்கியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்.
கர்நாட அரசின் விளம்பரத்துறை மற்றும் டிஏவிபி இயக்குனரகம் விளம்பரம் தந்து எங்களை ஊக்குவிப்பதில் அலட்சியமாக உள்ளது என்றார்.
தன் தந்தை வரதராஜ ஐயங்கார் மரணப் படுக்கையில் இருந்தபோது சுதர்மா நாளிதழை எக்காரணத்திற்காகவும் மூட மாட்டேன் என்று சம்பத் குமார் சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.
நாட்டின் கௌரவத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லும் மொழியை நாம் தான் பாதுகாக்க வேண்டும். உலகமயமாக்கலால் ஆங்கிலம் தான் அனைத்தும் என்று எண்ணி மாய்ந்து போகிறோம். அந்த நிலை மாற வேண்டும் என்றார் சம்பத்.