சிறை செல்ல திமுக தொண்டர்கள் யாரும் தயாரில்லை: பழ. நெடுமாறன் கிண்டல்
குமரி: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது கடந்த 30 ஆண்டுகளாக தொடர்கிறது. இதை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. கேரளாவில் இரண்டு மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டபோது அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து இத்தாலிய கடற்படை வீரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வைத்தனர். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடையே அத்தகைய ஒற்றுமை இல்லாததால் தமிழகம் அலட்சியமாக செயல்படுகிறது.
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால் அதிகமாக மகிழ்ச்சியடைவது ராஜபக்சே தான். 2009ம் ஆண்டில் பிரணாப் முகர்ஜி வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அதை தடுத்து நிறுத்த எதுவும் செய்யாதவர் பிரணாப் முகர்ஜி.
தற்போது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ராஜபக்சேவுடன் சேர்ந்து போர் நிறுத்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்ததாகச் சொல்லி திசை திருப்புகிறார். ஆகவே தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிப்பதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக அங்கு வசிக்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த மக்களின் நியாயமான அச்சத்தை நீக்க எந்த முயற்சியையும் மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.
அந்த மக்களின் அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுத்து, அதற்குப் பின்னர் அணுமின் நிலையத்தை செயல்பட வைக்க வேண்டுமே தவிர அவசர நடவடிக்கைகளில் அரசு இறங்கக் கூடாது.
சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. முன்கூட்டியே யாரையும் கைது செய்யக் கூடாது எனச் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு கைது செய்யப்படுவதற்கும், சிறை செல்வதற்கும் திமுக தொண்டர்கள் யாரும் தயாரில்லை என்பதை மறைப்பதற்காகவே இவ்வாறு அவர் சொல்லி வருகிறார் என்றார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications