26/11 தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு 40 இந்தியர்கள் உதவினார்கள்- பாகிஸ்தான் குண்டு
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளுக்கு குறைந்தது 40 இந்தியர்கள் உதவியதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல்களை நடத்த முக்கிய மூளையாக செயல்பட்ட ஜபியுத்தீன் அன்சாரி(எ) அபு ஜுன்டால் கடந்த வாரம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். இந்நிலையில் மும்பை தாக்குதல்கள் நடத்த குறைந்தது 40 இந்தியர்கள் உதவியதாக பெயர் தெரிவிக்க விரும்பாத பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் 4, 5 ஆகிய தேதிகளில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்களின் சந்திப்பு டெல்லியில் நடக்கிறது. அப்போது அபு ஜுன்டாலின் கைது விவகாரம் குறித்த தகவல்களை அளிக்குமாறு பாகிஸ்தான் இந்தியாவை வலியுறுத்தும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜுன்டால் கைது குறித்து இந்தியா எங்களுக்கு இதுவரை எந்தவித தகவலும் அளிக்கவில்லை. இந்தியர்களின் துணையில்லாமல் மும்பையில் தாக்குதல்களை நடத்த முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்துக் கொண்டே தான் இருந்தது. மும்பை தாக்குதல்கள் விசாரணை குறித்த முழு தகவல்களை கொடுக்க இந்திய அதிகாரிகள் தயங்குகிறார்கள். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் நீதிக் கமிஷன் இந்தியா வந்தபோது சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை. விசாரணை குறித்த தகவல்களை இந்தியா அளித்தால் தானே பாகிஸ்தான் ஒரு முடிவு எடுக்க முடியும் என்றார்.