ஆதர்ஷ் ஊழல்: அசோக் சவாண் மீது இன்று சிபிஐ குற்றப் பத்திரிக்கை!
மும்பை: ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு விவாகரத்தில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மீது இன்று சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இதையடுத்து அவர் எந்த நேரமும் கைதாகவுள்ளார்.
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் வீட்டு மனைகளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஒதுக்கிக் கொண்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவாண் ஆகியோர் மகாராஷ்டிர முதல்வர்களாக இருந்த காலத்தில் சர்ச்சைக்குரிய முறைகேடுகள் நடந்தன.
இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடந்துள்ளது. இதில் அசோக் சவாண் மீது 18 மாதங்களுக்கு முன்பே சிபிஐ எப்ஐஆர் தாக்கல் செய்துவிட்டது. இந் நிலையில் இன்று அவர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
நாளை இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
தேஷ்முக் மீது சவாண் குற்றச்சாட்டு:
இந் நிலையில் நேற்று இந்த விவகாரத்தில் சாட்சியம் அளித்த அசோக் சவாண் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மீது குற்றம் சாட்டினார்.
குடியிருப்புக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்த முடிவை அப்போது முதல்வராக இருந்த தேஷ்முக்தான் எடுத்தார். அவருடைய வழிகாட்டுதலின் படிதான் தான் செயல்பட்டதாக சவாண் தெரிவித்தார்.
இந்த விவாகரத்தில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்கள் சுஷில் குமார் ஷிண்டே, தேஷ்முக் மற்றும் சவாண் ஆகிய மூவரும் விசாரணைக் குழு முன்பு சாட்சியம் அளித்துள்ளனர். ஆனால் 3 பேரும் தாங்கள் தவறு செய்யவில்லை என்று தெரிவித்ததோடு ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
குதியில்லாத நபர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சவாண் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சவாண் உள்பட 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications