கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்
கும்பகோணம்: கும்பகோணத்தில் காதலியின் பெற்றோரை வெட்டிவிட்டு அவரை காரில் கடத்திச் சென்ற பிஇ மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள மேலக்கொட்டையூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். பாபநாசம் மின் வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்யாளராக உள்ளார். அவரது மனைவி சித்ரா. அவர்களுக்கு காயத்ரி(16) என்ற மகள் உள்ளார். அவர் பிளஸ் 2 படித்து வருகிறார். அவரும் கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ படித்து வரும் கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூரை சேர்ந்த பிரகாசம் மகன் சிபிசக்கரவர்த்தி (20) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்தாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் பற்றி அறிந்த காயத்ரியின் பெற்றோர் அவரைக் கண்டித்து, இனி சிபியை சந்திக்கவோ, பேசவோ கூடாது என்று கூறியுள்ளனர். சிபிக்கு காயத்ரியை பார்க்காமல், பேசாமல் இருக்க முடியவில்லை. இதையடுத்து அவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய தீர்மானித்த சிபி இதற்காக தனது நண்பர்கள் கும்பகோணம் எருத்துக்காரத் தெருவைச் சேர்ந்த விமல் (17), அழகாப்புத்தூர் அருண் (20), மருதாநல்லூர் அப்புனு என்ற புவனரோஜன் (22) ஆகியோரின் உதவியை நாடினார்.
அவர்கள் 3 பேரும் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல கார் வேண்டும் என்று கூறி டிராவல்ஸ் ஒன்றில் வாடகைக்கு கார் எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு நள்ளிரவில் காயத்ரி வீட்டுக்குச் சென்று அவரை கடத்த முயன்றனர். அதை தடுத்த அவரது பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு காயத்ரியை காரில் தூக்கிப் போட்டனர். ஆனால் கார் டிரைவருக்கு கடத்தலுக்கு உடன்பட மறுத்தார். இதையடுத்து அவர்கள் கார் டிரைவரை மிரட்டி அங்கிருந்து சென்றனர்.
கார் அசூர் பைபாஸ் ரோட்டில் சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த அனைவரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சித்ரா, அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிபி, விமல், அருண், புவனரோஜன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.