ஊழல் வழக்கு: மாஜி சட்டசபை செயலாளர் செல்வராஜ் உள்பட 4 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
தமிழக சட்டசபை செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் செல்வராஜ். அவர் தனது பணி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அதனால் அரசுக்கு ஏகப்பட்ட நிதி இழப்பீடு ஏற்பட்டதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து ஊழல் மற்றும் கண்காணிப்பு போலீசார் இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜ் முறைகேடுகள் செய்தது உறுதியானது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஓய்வு பெற்ற சட்டமன்ற செயலாளர் செல்வராஜ் அலுவலக வேலை தொடர்பாக டெல்லி செல்வதாகக் கூறி தனது தனிப்பட்ட பணிகளை மேற்கொண்டு பொய்யாக பணப்பட்டியல் தயார் செய்து அதன் மூலம் அரசிற்கு சுமார் ரூ. 75,319 இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற விடுதியில் முறைகேடாகவும், விதிகளுக்கு புறம்பாகவும் தகுதியற்ற நபர்களுக்கு இலவசமாக அறை ஒதுக்கி அதன் மூலம் ரூ. 1,90,200 அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.
அரசு வாகனத்தை பழுது பார்ப்பதற்காக தனியாரிடம் முறைகேடாக அவர் ஒப்படைத்துள்ளார். மற்றும் தனியார் வாகனங்களை தனது குடும்ப உறுப்பினர்களுக்காக பயன்படுத்தி அதற்கு அரசு பணத்தை செலவிட்டுள்ளார்.
மேலும் பாலகிருஷ்ணன் (பிரிவு அலுவலர்), பி.எஸ்.கே. சிங்காரவேலு (குழு அலுவர்), கே.இந்திரா (இணை செயலாளர்) ஓய்வு ஆகியோருடன் இணைந்து விருகம்பாக்கம் தச்சு மற்றும் கருமாற பட்டறை பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த அமலதாஸ் என்பவருக்கு சட்டமன்றத்தில் உள்ள நூலகத்தில் இரும்பு மற்றும் மர அலமாரிகளை பழுது நீக்கி பெயிண்ட் அடிக்கும் வேலைக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.
அப்பணிகளை முடிக்காமலேயே பணிகள் முடிந்தது போல கோப்புகள் தயார் செய்து ரூ. 3,90,400ஐ கையாடல் செய்ய முயன்றுள்ளார் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக செல்வராஜ், சிங்காரவேலு, பாலகிருஷ்ணன், இந்திரா ஆகிய 4 பேர் மீது சட்டப்பிரிவு 120(பி) 420, 477-ஏ, இந்திய தண்டனை சட்டம் 409, 109, ஊழல் தடுப்பு சட்டம் 13(1), 13(2), மற்றும் 15 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை அந்த 4 பேர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ஷெனாய் நகர் பிரேவரி சாலையில் உள்ள மங்களம் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் செல்வராஜின் வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு சென்ற சோதனை நடத்தினர்.
இதே போன்று அயனாவரம் சோலையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் குழு அதிகாரி சிங்காரவேலு, பம்மல் எல்.ஐ.சி. காலனி, 6-வது இணைப்பு சாலையில் குடியிருக்கும் பிரிவு அதிகாரி பாலகிருஷ்ணன், மேற்கு மாம்பலம் உமாபதி தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற இணை செயலாளர் இந்திரா ஆகியோரது வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
நீண்ட நேரம் நடந்த இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.