பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் போராட்டம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திமுக நாளை நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் போராடத்துக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோர் திமுக போராட்டத்துக்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அதிமுக வழக்கறிஞர் மக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினார். இதைத் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றனர் நீதிபதிகள்.
மேலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடும் போது காவல்துறையினர் அத்துமீறக் கூடாது என்றும் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள் பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.