ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு கர்நாடக முதல்வராகும் ஜெகதீஷ் ஷெட்டர்!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு கர்நாடக முதல்வராக பாஜக தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் நியமிக்கப்படவிருக்கிறார். தற்போதைய முதல்வர் சதானந்தா கவுடாவின் பதவி பறிபோகவுள்ளது.
சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எதியூரப்பா. அதன் பிறகு தனது ஆதரவாளரான சதானந்த கவுடாவை முதல்வராக்குமாறு பாஜக மேலிடத்திற்கு எதியூரப்பா பரிந்துரை செய்தார். அதன்படி சதானந்தா கவுடாவும் கர்நாடக முதல்வரானார். ஆனால் எதிர்பார்த்தது போன்று கவுடா எதியூரப்பாவின் பேச்சைக் கேட்கவில்லை. இதையடுத்து அவர் தனக்கு மீண்டும் முதல்வர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.
தனக்கு இப்போதைக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்பதை உணர்ந்த எதியூரப்பா சதானந்த கவுடாவை மாற்றிவிட்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்தார். அவரது பரிந்துரையை பாஜக மேலிடம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து வரும் ஜூலை 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு சதானந்த கவுடாவை மாற்றிவிட்டு ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக முதல்வராக நியமிக்கப்படுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாஜக தலைவர் கட்காரி மற்றும் பொதுச் செயலாளர் தர்மேந்திரா பிரதான் ஆகியோர் சதானந்த கவுடா, ஷெட்டர் மற்றும் கே. எஸ். ஈஸ்வரப்பா உள்ளிட்ட கர்நாடக தலைவர்களை நேற்று சந்தித்து பேசினர்.