ஆக. 7ல் துணை ஜனாதிபதி தேர்தல்: 'பிரஸ் மீட்' வைக்காமல் அறிவித்த தேர்தல் ஆணையம்!
டெல்லி: வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி குடியரசுத் துணை தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வழக்கமாக இதுபோன்ற முக்கியத் தேர்தல் அறிவிப்புகளை செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி மூன்று தேர்தல் ஆணையர்களும் சேர்ந்துதான் அறிவிப்பு வெளியிடுவார்கள். ஆனால் தற்போது அந்த மரபை மீறி, செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் துணை தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முடிகிறது. இதையடுத்து அந்த பதவிக்கான தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா, துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு குடியரசுத் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வோர் வரும் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வரும் 21ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் வரும் 23ம் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும்.
தேர்தல் நடக்கும் ஆகஸ்ட் 7ம் தேதி அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மரபை மீறிய தேர்தல் ஆணையம்:
குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வழக்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் தான் வெளியிடப்படும். ஆனால் இம்முறை தேர்தல் ஆணையம் மரபை மீறி செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி, சங்மா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ராஜ்யசபா செகரட்டரி ஜெனரல் அக்னிஹோத்ரி அறிவித்தார். பிரணாப் முகர்ஜி மீது சங்மா சுமத்திய குற்றச்சாட்டு எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் இதற்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டும் என்று கூறினார். ஆனால் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியிட்டதால் செய்தியாளர்களால் இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையரிடம் கேட்க முடியாமல் போனது.
1990-96ல் டி.என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பரவலாக்கி ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமி்த்து வருகிறது. அவர்கள் 3 பேரும் சேர்ந்து தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷ் ஓய்வு பெற்றதையடுத்து இரண்டாம் நிலை தேர்தல் ஆணையரான வி.எஸ். சம்பத் தலைமை தேர்தல் ஆணையரானார். அவரது இடத்திற்கு மூன்றாம் நிலையில் இருந்த ஹெச்.எஸ். பிரம்மா நியமிக்கப்பட்டார். ஆனால் பிரம்மாவின் இடத்திற்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. மூன்றாம் நிலை தேர்தல் ஆணையர் இல்லாமலேயே குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணை தலைவர் தேர்தல்களுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் செய்தியாளர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.
யாரெல்லாம் வாக்களிக்கலாம்?
குடியரசுத் துணை தலைவர் தேர்தலைப் பொறுத்த வரை நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் மற்றும் நியமன உறுப்பினர்கள் 12 பேர் என 245 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதே போல மக்களவையைப் பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 543 பேர் மற்றும் நியமன உறுப்பினர்கள் இருவர் என 545 பேர் வாக்களிக்க உள்ளனர். ஆக மொத்தம் 790 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications