திமுகவினரைப் பிடித்து அடைக்க 134 சிறைகளும் தயார்...!
சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகும் திமுகவினரை தமிழகம் முழுவதும் உள்ள அத்தனை சிறைகளிலும் அடைக்காமல், 9 மத்திய சிறைகளில் மட்டும் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்காக அந்த சிறைச்சாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை தேவைப்பட்டால் தமிழகத்தில் உள்ள 134 சிறைகளிலும் அடைக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
ஏற்கனவே அங்கு அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளை விசாரணைக் கைதிகளின் அறைகளுக்கு மாற்றியுள்ளனர். சாப்பாடு, தண்ணீர், கழிவறை உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் திமுகவினரின் சிறை நிரப்பும் போராட்டத்தை சமாளிப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். பொது்மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கைதாகும் திமுகவினரை தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்க முதலில் திட்டமிடப்பட்டது. இருப்பினும் தற்போது 9 மத்திய சிறைகளில் மட்டும் அடைக்க தீர்மானமாகியுள்ளது. இங்கு மட்டும் 50,000 பேர் வரை அடைக்க முடியும்.
ஒருவேளை அதை விட கூடுதலாக கூட்டம் சேர்ந்தால் மாவட்டச் சிறைச்சாலைகளிலும், மற்ற கிளைச் சிறைகளிலும் அடைக்கவும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
குறைந்தது 15 நாட்களாவது திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள் என்று தெரிகிறது. எனவே 20 நாட்களுக்குத் தேவையான சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்கள், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. சிறப்புக் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
திடீரென யாருக்காவது நெஞ்சு வலி உள்ளிட்ட சுகவீனங்கள் ஏற்பட்டால் சமாளிப்பதற்காக மருத்து வசதிகளும், மருந்து, மாத்திரை போன்றவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை புழல் மத்திய ஜெயிலில் 5000 பேர், கடலூரில் 3000, வேலூர், திருச்சி, கோவையில் தலா 10,000, சேலத்தில் 5000, பாளையங்கோட்டையில் 3000, புதுக்கோட்டையில் 2000 பேரை அடைப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறைகளை காலியாக வைத்திருக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.