திமுவினருக்கு காலையில் கஞ்சி, வெண் பொங்கல்... ஞாயிற்றுக்கிழமை கோழிக்கறி!
இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு தரப்படும். அதாவது அவர்களுக்கு பி கிளாஸ் சாப்பாடு தரப்படுமாம்.
பி கிளாஸாக இருந்தாலும் சாப்பாடு சூப்பராக இருக்குமாம். காலையில் சுடச் சுட உப்புமா, வெண் பொங்கல், கஞ்சி ஆகியவை தரப்படும். இதை ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் என மாற்றி மாற்றித் தருவார்களாம்.
மத்தியான சாப்பாடாக சாம்பார், காய்கறி கூட்டு, ரசம், மோர் ஆகியவை கிடைக்கும். அப்பளம் தரப்பட மாட்டாது.
இரவுக்கு சாப்பாடும், சாம்பாரும் மட்டும்தானாம். அதேசமயம், சர்க்கரை வியாதி உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் 2 சப்பாத்தி தருவார்களாம்.
ஞாயிற்றுக்கிழமை கோழிக்கறியைப் போட்டு அசத்துவார்களாம்.
'ஏ' கிளாஸ் சாப்பாடு வேண்டுமென்றால்...
சிலர் ஏ கிளாஸ் சாப்பாடு வேண்டும் என்று விரும்பினால் அதற்கு கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்றால், அவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு கோழிக்கறி குழம்பு கொடுப்பார்கள். மாலையில் கூடுதலாக சுண்டல், டீ ஆகியவை தருவார்கள். சப்பாத்தியும் விசேஷமாக கிடைக்கும்.
தூங்க போர்வையும், பாயும்
இரவில் தூங்கும்போது ஒவ்வொருவருக்கும் போர்வையும், படுக்க பாயும் தருவார்களாம்.
மொத்தத்தில் எந்தவித குறையும் இல்லாமல் திமுகவினர் தங்களது காவல் நாட்களை சிறையில் கழிக்க முடியும்.