கைதாகி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போன திமுகவினர்?
சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினரில் பலர் கைது வரை இருந்து விட்டு போஸ் கொடுத்தும் விட்டு பிறகு நைசாக அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, தஞ்சை ,கரூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்திய திமுகவிரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.
கைதான திமுகவினருக்கு திருமண மண்டபத்தில் வைத்து மதிய உணவு பொட்டலம் வழங்கப்பட்டுள்ளது. சிறை நிரப்பும் போராட்டம் மிக அமைதியாக நடந்து முடிந்த நிலையில் போலீசாரும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பணிவாக நடந்து கொண்டனர். இங்கு தான் போலீசாரின் சூட்சமம் இருக்கின்றதாம். தற்போது கைதாகியுள்ள திமுகவினரில் பலர் கைது பட்டியலில் பெயர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் அவர்கள் போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு மண்டபம் வரை வந்து அனைவரையும் வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்களாம். இதனால் ஒவ்வொரு நகரத்திலும் கைதானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றதாம்.
மாலை 6 மணி வரை இதே நிலை நீடித்தால் கைதான திமுகவினரை போலீசார் தயக்கமின்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைக்க முயற்சி செய்வார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும் திமுக வட்டாரத்தில் இது குறித்து உறுதியான தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications