நெல்லையில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 13 இடங்கள் மாயம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் காலியாக உள்ள 13 பணியிடங்கள் உள்ளிட்ட பல பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாததற்கு மேலிட உத்தரவே காரணம் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. அப்போது அறிவிக்கப்பட்ட பட்டியலில் 94 காலி பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன. பாட வாரியாக இருந்த இடங்கள் வருமாறு, தமிழ்-33, ஆங்கிலம் 6, வரலாறு 15, கணிதம் 8, உயிரியல் 2, வணிகவியல் 16, பொருளியல் 10, அரசியல் அறிவியல் 2, உடற்கல்வி இயக்குனர் (கிரேடு 1)1, தாவரவியல் 1 ஆகிய இடங்களே காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விலங்கியல், வேதியியல், இயற்பியல், இந்திய பண்பாடு, மனையியல், முகவியல், புதுயியல் ஆகிய பாடங்களுக்கு மாவட்டத்தில் ஒரு காலி இடம் கூட கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 4 பள்ளிகளில் தலா 9 ஆசிரியர்கள் வீதம் 36 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் புதிய மேல்நிலைப்பள்ளிகளான பிள்ளையார்நத்தம் பள்ளியில் 2 இடங்களும், சுத்தமல்லி பள்ளியில் 4 இடங்களும், முனைஞ்சிபட்டியில் 4 இடங்களும், சாயமலை பள்ளியில் 3 இடங்களும் காலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 பள்ளிகளில் உள்ள 13 இடங்கள் குறித்து விதிப்படி அறிவிக்கப்படவில்லை எனவும் இதுபோல் மாவட்டம் முழுவதும் மாணவர்களி்ன் நலனைக் கருத்தில் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கள், பதவி உயர்வால் காலியாக உள்ள இடங்கள் என சுமார் 40 முதல் 50 இடங்கள் வரை மாயமாகிவிட்டன.












Click it and Unblock the Notifications