மருத்துவமனையாக புதிய தலைமைச் செயலகம்: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஆர். வீரமணி என்பவர் தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சி. வெங்கட ராமலு, உறுப்பினர் தேவேந்திர குமார் அகர்வால் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரரின் வழக்கறிஞர்கள். பி. வின்சென்ட், ஆர். நெடுமாறன் ஆகியோர், மருத்துவமனையாக மாற்றுவதற்கு முடிவெடுக்கும் முன்பு மக்களின் கருத்தை அரசு கேட்டறியவில்லை. அமைச்சரவையில்கூட முறையான விவாதம் நடத்தப்படவில்லை. மருத்துவக் கல்லூரியாக மாற்றுவதற்கு மாநில சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டு ஆணையம் இந்த ஆண்டு மே 16-ம் தேதி அளித்த ஒப்புகைச் சான்றிதழ் எந்த அடிப்படையில் அளிக்கப்பட்டது என்பது புதிராக உள்ளது என்றனர்.
இதற்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ். குரு கிருஷ்ண குமார் ஆட்சேபம் தெரிவித்தார்.மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து வீரமணியின் மனு குறித்து பதில் அளிக்கும்படி தமிழக பொதுப் பணித்துறைச் செயலர், பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளர், சுகாதாரத் துறைச் செயலர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டு ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி வெங்கடராமலு உத்தரவிட்டார். மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications